Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சொந்த வீட்டிலேயே 100 பவுன் நகைகளை திருடி நாடகமாடிய மனைவி: மனவேதனையில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஏப்ரல் 08, 2020 07:20

தூத்துக்குடி: சொந்த வீட்டிலேயே மனைவி 100 பவுன் நகைகளை திருடி நாடகமாடிய சம்பவத்தில் ஏற்பட்ட வேதனை காரணமாக கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 59). தூத்துக்குடி துறைமுகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.மகள்களுக்கு திருமணமாகி விட்டதால் வின்சென்ட் மற்றும் அவரது மனைவி ஜான்சி தனியாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில் தங்களது வீட்டிற்குள் மர்மநபர்கள் புகுந்து 100 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த 3-ந் தேதி வின்சென்ட் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ஜான்சி போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில் தனது வீட்டில் இருந்த நகைகளை தானே திருடி வீட்டின் பின்பகுதியில் புதைத்து வைத்துவிட்டு ஜான்சி கொள்ளை நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டிலிருந்த நகைகளை கணவருக்கு தெரியாமல் எடுப்பதற்காக, நிலவேம்பு குடிநீரில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து கணவரை மயக்கமடைய செய்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.

சீட்டு நடத்தி வந்ததில் தனக்கு ஏற்பட்ட கடன் சுமையை சரி செய்வதற்காக வீட்டிலிருந்த நகைகளை கணவருக்கு தெரியாமலே திருடியதாக ஜான்சி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். வீட்டின் பின்பகுதியில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 100 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்க பணம் மீட்கப்பட்டது.

இந்நிலையில் ஜான்சி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கணவன்- மனைவி இருவரும் வீட்டில் இருந்து வந்தனர். ஏற்கனவே உடல்நலம் பாதித்திருந்த நிலையில் சொந்த வீட்டிலேயே நகைகளை திருடி நாடகமாடிய மனைவியின் செயல் வின்சென்டை வேதனையடைய செய்தது. தொடர்ந்து அவர் புலம்பியபடி இருந்துள்ளார்.

இந்தநிலையில் வீட்டில் இருந்த ஒரு அறையில் இன்று அதிகாலை வின்சென்ட் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு அறையில் இருந்த மனைவி ஜான்சி இன்று காலை எழுந்து வந்து பார்த்த போது கணவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்து நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வின்சென்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சொந்த வீட்டிலேயே மனைவி நகைகளை திருடி நாடகமாடிய சம்பவத்தில் ஏற்பட்ட வேதனை காரணமாக வின்சென்ட் தற்கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்